Wednesday, January 21, 2009

ஒரே இரவில் பலரது வாழ்க்கையை -- IT

சினிமாக்களில் வருவதுபோல ஒரே இரவில் பலரது வாழ்க்கையை உயர்த்திப் போட்ட அதே ஐ.டி. வேலை, இன்றும் ஒரே நாளில் அவர்கள் வாழ்க்கையை நிலைகுலைய வைத்திருக்கிறது.
உலகப் பொருளாதார வீழ்ச்சி, சுமார் 7,000 கோடி அளவில் சத்யம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஊழல்.. 'விப்ரோ' நிறுவனத்துக்குக் கொடுத்து வந்த வேலையை நிறுத்திக் கொண்ட உலக வங்கி.. என்று ஊடகங்களில் வரும் தகவல் கள் இப்போதுதான் பயமுறுத்து கின்றன.. ஆனால், இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையின் தலைநகரமான பெங்களூருவில், சில மாதங்களுக்கு முன்பேயே துவங்கி விட்டிருக்கிறது இந்த ஐ.டி வீழ்ச்சி!
'கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சிறிதும் பெரிதுமாக சுமார் முந்நூறு ஐ.டி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே ஆள் குறைப்பில் இறங்கி விட்டன. விரைவில் இந்தியா முழுக்க இருக்கிற ஐ.டி நிறுவனங்கள் பாதிக்கப்படும்!' என்கிற அதிர்ச்சித் தகவல் நம் காதுகளை வந்தடைந்தது!
விஷயத்தின் தீவிரம் நம்மை உலுக்க, பெங்களூருவின் ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கிற.. பார்த்த.. தமிழர்களை சந்தித்துப் பேசினோம்.
அனைவருமே புகைப்படத்துக்கு மறுத்துத்தான் பேசி னார்கள். இல்லை.. இல்லை.. தங்கள் மனக் குமுறல்களைக் கொட்டினார்கள்.


''நான் சென்னையிலிருந்து பெங்களூரு வந்து ஏழு வருஷமாச்சு.. என்னோட ஆரம்ப சம்பளம் 20,000 ரூபா. கடைசியா எனக்கு கம்பெனி கொடுத்த புரமோஷன்ல அறுபதாயிரம் ரூபாயா ஆகியிருந்தது என் சம்பளம்..'' என்கிற மீரா கிருஷ்ணனுக்கு இன்றைக்கு வேலை இல்லை.
''வீட்டு வாடகை, சாப்பாடு, போக, வர கார் வசதினு எல்லாமே கம்பெனி கொடுத்துடும். வாங்குற சம்பளத்துல எனக்குனு ஒரு செலவு கிடையாது. மூணு வருஷத்துக்கு முன்னால கல்யாணமாகி, குழந்தை பிறந்து சந்தோஷமா போய்ட்டு இருந்தது வாழ்க்கை.. திடீர்னு ஒரு நாள் எங்க எல்லாரையும் கூப்பிட்டு 'இனிமே கம்பெனியை நடத்த முடியாது'னு சொல்லிட்டாங்க. அவ்வளவுதான். மறுநாள் என்னை பிக்கப் பண்ண கார் வரல..
வெளியில வேலை தேடுறேன். கிடைக்கல. என்னோட இத்தனை வருஷ அனுபவமும் சுத்த வேஸ்ட்ங்கிறது இப்போதான் தெரியுது'' - கட்டுப்படுத்தவே முடியாமல் கேவுகிறார் மீரா.
வேலையிலிருந்து முதலில் தூக்குவது திருமணமான பெண்களைத்தானாம்! அடுத்து, திருமணமான ஆண்களையாம்! அதுபற்றிச் சொல்லி வருந்தினார் தர்மபுரியிலிருந்து இங்கு வந்து வேலை செய்கிற கல்பனா. ''நூறு பேர் இருந்த இடத்துல இருபது, முப்பது பேரை வச்சு வேலை வாங்கியாகணும். அப்படின்னா, அவங்க ராத்திரி, பகல் பார்க்காம வேலை செய்றவங்களா இருக்கணும். கல்யாணமான பெண்கள்னா, குறிப்பிட்ட நேரத்துக்குள்ள வீட்டுக்குப் போறதுலயே நோக்கமா இருப்பாங்க. குடும்பம், குழந்தை, பிரசவம்னு லீவ் எடுப்பாங்க. அதனால அவங்களைத்தான் முதல்ல வெளியேத்துறாங்க.
கல்யாணமான ஆண்களும்கூட பேச்சுலர்ஸ் அளவுக்கு ஆபீஸ்ல நேரம் செலவழிக்க முடியாது இல்லையா? அதனால, கொஞ்சம்கூட ஈவு, இரக்கமே இல்லாம, 'ஸ்டார் பர்ஃபார்மரா' ('பிரமாதமாக வேலை செய்கிறவர்' என்று நிறுவனமே ஸ்டார் அந்தஸ்து கொடுக்குமாம்) இருந்தாக்கூட தூக்கிடுறாங்க. எங்க கம்பெனியில போன நவம்பர் மாசம், 30 வயசைத் தாண்டினவங்க எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துட்டாங்க.. நாங்களும் பயந்துட்டுத்தான் இருக்கோம்'' என்றவர், ஒரு கண்ணீர்க் கதையைச் சொன்னார்..
''எங்க டீம் லீடர் அவர். பிரமாதமா வேலை செய்வார். போன செப்டம்பர்லதான் அவருக்குக் கல்யாணம் ஆச்சு. அவர் மனைவி இப்போ கர்ப்பமா இருக்காங்க. அவருக்கும் வேலை போய்டுச்சு. போன வாரம் தற்செயலா அவரோட வீட்டுக்குப் போயிருந்தேன். ஐயோ! அந்தக் கொடுமையை என்னனு சொல்லுவேன்! கையில இருந்த காசு மொத்தமும் செலவழிஞ்சு போக, மூணு நாள் பட்டினியா கெடந்திருக்காங்க ரெண்டு பேரும். 'பேசாம செத்துப் போய்டலாம்போல இருக்கு'னு அவர் குலுங்கிக் குலுங்கி அழ, என்னால தாங்கவே முடியல.
ஆபீஸ்ல ஒரு பாஸா மட்டும்தான் அவரை நான் பார்த்திருக்கேன். டீம்லயே 'ஜூனியர் மோஸ்ட்' ஆன என்கிட்ட அவர் அப்படி அழுதது.. ச்சே! இந்த உலகம்.. பணம்னு எல்லாத்து மேலயும் வெறுப்பு வந்துடுச்சு'' என்கிறார் கண்ணீர் மல்க!
கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாக வெளிவரும் ஒவ்வொரு கதையுமே இதயத்தை நொறுக்குகிறது.
''எதுவா இருந்தாலும் இ-மெயில்தான். இனிமே எல்லாரும் பத்து மணி நேரம் கண்டிப்பா வேலை பார்க்கணும். கார், சாப்பாடு வசதில்லாம் கிடையாது'ன்னு ஒரு இ-மெயில் அனுப்பிட்டா மறுநாளே கையில டிபன் பாக்ஸோட டவுன் பஸ் பிடிச்சு ஆபீஸ் வந்துடணும். அப்படித்தான் வந்துக்கிட்டு இருக்கோம்'' என்றார் ரேவதி.
பெங்களூருவின் பெரிய ஐ.டி நிறுவனம் ஒன்றில் மாதம் 80,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த பிரகாசம், இன்று 7,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போகிறார்..
''ஐ.டி. துறையில சம்பளம் ஜாஸ்தினு வெளியில இருக்குறவங்களுக்குத் தோணும். ஆனா, அதுக்கேத்த கமிட்மென்ட்ஸ் எங்களுக்கு இருக்கும். காருக்கு மட்டும் மாசம் இருபதாயிரம் ரூபா இ.எம்.ஐ கட்டினேன். வேலை போனதும் காரை வித்துட்டேன். ஆனாலும் கார் கடன் இன்னும் முழுசா அடையல. அதுதவிர, கிரெடிட் கார்டு கடன் இருக்கு. ஃபர்னிச்சர், மைக்ரோவேவ் அவன், டிஜிட்டல் கேமரா, ஹோம் தியேட்டர்னு கண்ட பொருளையும் வாங்கிக் குவிச்சிருக்கேன். இதையெல்லாம் வித்தா பைசாகூட தேறாது. தலைக்கு மேல கடனை வச்சுக்கிட்டு திண்டாடுறேன்..'' என்றவர் நிறுத்தி, ''என்னையும் என் மனைவியையும் விடுங்க. எப்படியோ போறோம். பீட்ஸாவும் பர்கருமா சாப்பிட்டுப் பழகின குழந்தைக்கு திடீர்னு தினம் தினம் ரசம் சாதம் போடுற கொடுமை எந்தத் தகப்பனுக்கும் வரவே கூடாதுங்க.. போன மாசம் முழுக்க ரெண்டு வேளை சாப்பாடுதான். கடனை அடைச்சாத்தான் நிம்மதி கிடைக்கும்!'' என்றார் கலங்கும் கண்களுடன்.
ஐ.டி. நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் பிரசாந்த் குமார், இந்த அவல நிலையின் காரணம் பற்றியும் ஐ.டி. துறையின் எதிர்காலம் பற்றியும் பேசினார்..
''தொண்ணூறுகளின் இறுதியில் பெங்களூருவில் 600-க்கும் மேற்பட்ட ஐ.டி. கம்பெனிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால் சென்டர்கள், பி.பி.ஓ-க்கள் இருந்தன. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெங்களூருவைத் தேடி வந்து குடியேறினர் மக்கள்.
ஆனால், சமீபத்தில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தொடர் சரிவின் காரணமாக, உலகெங்கும் ஐ.டி. கம்பெனிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. பெங்களூருவில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 8,500 பேர் வேலை இழந்துள்ளனர். சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு, சலுகைகள் குறைப்பும் இதனால்தான்.
சமீபத்தில் 'யுனைட்ஸ்' என்கிற தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை வழங்குவோர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இன்னும் ஆறு மாதத்தில் இந்தியாவில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்க நேரிடும்' என்று அறிவித்துள்ளது. கவலை தரும் அறிக்கை இது'' என்றவர்,
''இருந்தாலும் '2009-ல் தகவல் தொழில் நுட்பத்துறை மீண்டும் கோலோச்சும்' என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை. காத்திருப்போம்'' என்றார். இரவிலும் வேலை செய்யும் இவர்களின் எதிர்காலத்துக்கு விடியல் வருமா?
- இரா.வினோத்


'அவள்' அடித்த எச்சரிக்கை மணி!
கடந்த 12.09.08 தேதியிட்ட 'அவள் விகடன்' இதழில், 'கேம்பஸ் இன்டர்வியூ குளறுபடிகள்' என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். 'இந்தியாவில் ஐ.டி என்கிற துறையே இறங்குமுகத்தில் இருக்கிறது' என்பதை முதன் முதலாக நாம் வெளியிட்ட பிறகு, 'பெரும்பாலான கேம்பஸ் இன்டர்வியூக்கள் வெறும் கண் துடைப்புதான்' என்ற உண்மை தமிழகம் எங்கும் வெளிப்படையாகவே பேசப்பட்டது.
இதையடுத்து, கடந்த 05.12.08 தேதியிட்ட இதழில், நமக்கு பேட்டி கொடுத்திருந்தார், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி.
'ஐ.டி. துறையின் இந்தப் பின்னடைவுகூட நல்லதுக்குத்தான். இனியேனும் உலக நாடுகளுக்கு சேவை செய்யாமல், உலகத் தரத்துக்கு இணையான வர்த்தகச் சேவையை நாமே துவங்கி, நாலா திசையிலும் பரவச் செய்ய வேண்டும்' என்கிற வேண்டுகோளையும் அந்தப் பேட்டியில் முன்வைத்திருந்தார் பாலகுருசாமி.
ஐ.டி நிறுவனங்கள் இன்றைக்கு மனதில் கொள்ள வேண்டிய ஆலோசனை இது!



இரக்கம் இல்லாத இ-மெயில்!
ஒரு ஐ.டி நிறுவனம் தன் ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு இ-மெயிலில் இருந்த வரிகள் இவை.. 'வடை, அப்பளம், காய்கறி, பழங்களை உணவில் குறைத்தால் மாதம் 5 லட்ச ரூபாய் சேமிக்க முடியும். வருடத்துக்கு 60 லட்சம் ரூபாய் சேமிப்பு. அதனால், நாளை முதல் உணவில் இவை கிடையாது!'



''குறையவில்லை மவுசு!''
'கல்யாண சந்தையிலும் ஐ.டி. துறையினரின் மார்க்கெட் இறங்கி இருப்பதாக'க் கேள்விப்பட்டு கல்யாண போர்ட்டல்கள் நடத்துகிற 'கல்யாண மாலை' மோகன் மற்றும் 'பாரத் மேட்ரிமோனியல்' முருகவேலிடம் கருத்துக் கேட்டோம். அவர்களின் கருத்து வேறாக இருக்கிறது.
''இன்று வரையிலுமே உள்ளூர் ஐ.டி. மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்குமான மவுசு குறையவே இல்லை. ஆனால், வெளிநாட்டு ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கிற மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்க ரொம்பவே தயங்குகிறார்கள்..'' என்றார் மோகன்.
இதே கருத்தை வலியுறுத்துகிற முருகவேல், நம் ஊர் ஐ.டி துறை பற்றிய நம்பிக்கையுடனேயே இருக்கிறார்..
''வெளிநாடுகள் அளவுக்கு நம் ஊரில் பாதிப்பு இருக்காது. சம்பளம் குறையலாம்; சலுகைகள் பறிக்கப்படலாம்; வேலை இழப்பும் இருக்கலாம்; ஆனால், ஒட்டு மொத்த ஐ.டி துறையேயெல்லாம் விழுந்து விடாது. அதனால், ஐ.டி துறையில் பணிபுரியும் மணமக்களுக்கான தேவையும் அப்படியேதான் இருக்கும்'' என்பது முருகவேலின் கருத்து!



''அமெரிக்காவில் பிரச்னை ஜாஸ்தி!''
திருமணமாகி, அமெரிக்காவில் குடியேறி விட்ட 'மகாநதி' ஷோபனா, சமீபத்தில் சங்கீத சீஸனில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார். ''நம் நாட்டிலேயே நிலைமை இப்படி என்றால்.. அமெரிக்காவில் என்ன நிலை?'' என்கிற கேள்வியை முன்வைத்தோம் அவரிடம்..
''அமெரிக்கா ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்குங்கிறது நிஜம்தான். ஒவ்வொரு அமெரிக்கரோட வருமானமும் துணிக் கடை, ரெஸ்டாரன்ட், பொழுதுபோக்கு அம்சங்கள்னு பலதுக்கும் நேரடியா போய்டுற மாதிரியான ஒரு வாழ்க்கை முறை அவங்களோடது. மாச வருமானத்துல எவ்வளவு கிரெடிட் கார்டுக்குக் கட்ட முடியும்ங்கிற அடிப்படையில பொருள்களை வாங்கிக் குவிக்கிறவங்க.
அதனாலதான் இந்தப் பொருளாதார நெருக்கடியை அவங்களால சமாளிக்க முடியல. வாங்கின கடனை வங்கிகளுக்குத் திரும்பச் செலுத்த முடியல. வங்கிகள் திவாலாகுது.
நம்ம நாட்டுலயாவது குறைவான சதவிகித மக்களுக்குத்தான் கஷ்டம். அங்க பிரச்னை ஜாஸ்திதான்! ஆனா, ஒபாமா வந்துட்டதால, அவர் எல்லாத்தையும் மாத்திடுவார்னு அவங்க நம்புறாங்க. எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு'' என்றார்.
படம்: வி.செந்தில்குமார்



''மறைமுக பாதிப்பு!''
''ஐ.டி துறையில் நேர்ந்திருக்கிற பாதிப்பு என்பது நேரடியானது. இது தவிர, மறைமுக பாதிப்புகளும் நிறைய இருக்கின்றன. ஐ.டி. நிறுவனங்களை நம்பி மாதத் தவணையில் கார் வாங்கி, ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் பல இளைஞர்களும். தவிர, ஜிம்கள், கேடரிங்குகள், ஹவுஸ் கீப்பிங்.. என்று பல வகையான தொழில்களும் ஐ.டி-யால் வளர்ந்தன. இன்று அவைதான் முதல் கட்ட பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. ஐ.டி. துறையினர் ஏற்றி விட்ட ரியல் எஸ்டேட் விலையும் வீட்டு வாடகையும் எப்போது கட்டுக்குள் வரும் என்பது தெரியவில்லை..'' என்று வருந்துகிறார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ஒருவர்.
''கண்ணு முன்னால நிக்குது இ.எம்.ஐ..''
சமீபத்தில் சரிவைச் சந்தித்த 'சத்யம்' நிறுவனம் 'தன் ஊழியர்கள் யாரும் மீடியாக்களிடம் பேச அனுமதி கிடையாது' என்று இ-மெயில் அனுப்பி உள்ளது. இருந்தாலும், அந்த நிறுவன ஊழியர்கள் சிலரிடம் பேசினோம்.. தங்கள் அடையாளங்களை மறைத்து அவர்கள் வெளிப்படுத்திய உண்மைகள் இங்கே..
'' 'சத்யம் கம்பெனியை இழுத்து மூடப் போறாங்க. அதுக்குள்ள எல்லாரும் வேற வேலை தேடிக்குங்க'னு சீனியர்ஸ் என்னை நாலு மாசம் முன்னவே எச்சரிச்சாங்க. அவங்களும் வேற கம்பெனிக்கு நல்ல சம்பளத்துக்குப் போயிட்டாங்க. ஆனா, அவங்க சொன்னதை நம்பாத நான் சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்.. இப்ப வேற கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டா, பிப்ரவரி வரைக்கும் ஆட்களை வேலைக்கு எடுக்கிறதில்லைனு சொல்லிட்டாங்க!''
''வேலை இருக்கா.. இல்லையா.. ஜனவரி மாசச் சம்பளம் வருமா.. வராதா..னு எதுவுமே தெரியல. இதுல, தங்கச்சி கல்யாணத்துக்குக் கடன் வாங்கினது.. ஊர்ல அப்பா, அம்மாவுக்கு வீடு கட்டிக் குடுத்தது..னு கட்ட வேண்டிய இ.எம்.ஐ.கள் கண்ணு முன்னாடியே நிக்குது. பிப்ரவரி ஒண்ணாம் தேதியை நினைச்சா இப்பவே பயமா இருக்கு!''
ஒரே ஒரு பாஸிடிவ் வாக்குமூலம்..
''நான் தேவையில்லாத எந்த செலவும் செய்யல.. இப்பக்கூட அக்கவுன்ட்ல சில லட்சங்கள் இருக்குறதால நாளையைப் பத்தின பயம் இல்ல எனக்கு. அதோட, இந்தப் பிரச்னை ரொம்பவும் தற்காலிகமானதுனு சொல்றாங்க. மத்திய அரசும் 'போர்டு ஆஃப் டைரக்டர்ஸ்' பத்துப் பேரை நியமிச்சிருக்கு. எங்க கம்பெனி சரியாகிடும்னு நம்புறேன்.''

7 comments:

  1. உங்கள் அலசல் பல பிரச்சினைகளை வெளியில் சொல்கிறது. நிறைய எழுதியிருந்தால் நான் படிக்காமல் ஜம்ப் ஆகிவிடும் வழக்கமுடையவன். ஆனால் இதை ஒரு வரிகூட மிஸ் பண்ணாமல் படித்தேன்.

    நாளை என்கிற உலகம் எப்படி இருக்கப்போகிறது. இதை அறியாத வரையில் உலகம் துன்பமானதுதான்.

    ReplyDelete
  2. I.T துறை மக்கள் தாகமெடுத்தால் கோக், பசியெடுத்தால் பிஸா, போரடித்தால் மல்டி பிளக்ஸ் தியேட்டர், இப்படித்தானே நண்பா நீ வாழ்ந்து கொண்டிருந்தாய் ..???

    நிஜம் சுடும்..

    உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான்.

    Oh. Sorry. Coke தான் குடிப்பான்.

    இப்போ வாட்டர் பாக்கெட்டாவது கிடைக்குமா..??

    ReplyDelete
  3. எங்க கம்பெனி சரியாகிடும்னு நம்புறேன்.''

    naamum nabuvoomaaga...

    ReplyDelete
  4. தமிழ் நெஞ்சம் அவர்களுக்கு நன்றி ,,,,உங்கள் அன்பை என்றும் எதிர் பார்க்கும் ,,,கிருக்குபையன் ....

    ReplyDelete
  5. வண்ணத்துபூச்சியார் அவர்களே ...ஒரு மனிதனின் வளர்ச்சி படிபடியகத்தான் இருக்க வேண்டும் ,,,,அதே போல் தான் தொழில் வளர்ச்சியும் ....ஆனால் IT நிறுவனங்களின் வளர்ச்சி சற்று வித்தியாசம் ,,,,ஆம் மற்ற துறைகளை பின்னுக்கு தள்ளியது ,,,அபார வளர்ச்சி ,,,ம்ம்ம் ஊரெல்லாம் ஒரே பேச்சு ,,,IT IT .....ஆனால் இப்போது தான் தெரிகிறது அது ஒரு நோய் என்று ....இந்த நோய்க்கு மருந்து உண்டா ? யாருக்கு தெரியும் ....

    ReplyDelete
  6. நணபர் முரு அவர்களே ...உங்கள் கம்பெனி சரியாகிவிடும்..ஆனால் நமது கமிட்டி திவால் ஆகி விடும் போல் தெரிகிறது ....

    ReplyDelete
  7. // 'என்னையும் என் மனைவியையும் விடுங்க. எப்படியோ போறோம். பீட்ஸாவும் பர்கருமா சாப்பிட்டுப் பழகின குழந்தைக்கு திடீர்னு தினம் தினம் ரசம் சாதம் போடுற கொடுமை எந்தத் தகப்பனுக்கும் வரவே கூடாதுங்க..//

    சர்கரை,கொழுப்பு,உடல் பருமன் போன்ற நேய் இனிமேல் இளைய சமுதாயத்துக்கு வரும் வாய்ப்பு கம்மியாகும்.

    ReplyDelete